மனைவியை காண இந்தியா சென்ற யாழ் நபர் அதிரடியாக கைது!
யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாகப் புறப்பட்டு, தமிழகம் சென்ற யாழ் குடும்பஸ்தர் இராமேஸ்வரத்தில் இந்தியக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த நபர் ஒருவர் இராமேஸ்வரம் பகுதியில் மறைந்திருப்பதாக இராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகி அவர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவுப் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சட்டவிரோத பயணம்
அப்போது பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் சந்தேகத்திற்கிடமான முறையில் அமர்ந்திருந்தவரை சோதனையிட்டபோது, அவரிடம் இலங்கைப் பணம், இலங்கை கடவுச்சீட்டு மற்றும் இலங்கை அரச அடையாள அட்டை ஆகியவை இருப்பது தெரியவந்தது.
இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த கண்ணன் என்ற 34 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், கண்ணன் கடந்த 6 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் ஃபைபர் படகு ஒன்றில் புறப்பட்டு, இந்தியாவின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் கடற்கரையில் வந்து இறங்கியுள்ளார்.
அங்கிருந்து பேருந்து மூலமாக இராமேஸ்வரம் வந்துள்ளார். கண்ணன் தனது மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள மனைவியைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளதாக விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
மண்டபம் அகதிகள் முகாமில் மனைவி
மண்டபம் அகதிகள் முகாமிற்குச் செல்வதற்காக இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் காத்திருந்தபோதே, அவர் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கண்ணனை இராமேஸ்வரம் நகரப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கியூ பிரிவுப் பொலிஸார், அவர் மீது கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கண்ணனுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டு, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.