உலகின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்தியா வருகை; புகைப்படம் எடுக்க 10 லட்சம்!
ஆர்ஜென்டினாவை சேர்ந்த உலகின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது இந்திய விஜயத்தை ஆரம்பித்து இன்று (13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். மெஸ்ஸியின் வருகையை எதிர்பார்த்து, ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கொல்கத்தா விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
அதோடு மெஸ்ஸி தங்கியுள்ள கொல்கத்தா நகர ஹோட்டலுக்கு முன்பாகவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க 10 இலட்சம் ரூபா
14 வருடங்களுக்குப் பின்னர் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளதுடன், அவரது இந்த விஜயம் 'GOAT India Tour 2025' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள மெஸ்ஸியை வரவேற்கப் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், 70 அடி உயரமான அவரது உருவச்சிலை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி தனது இந்திய விஜயத்தின் போது கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் நடைபெறும் விசேட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
கொல்கத்தாவில் இன்று நடைபெறும் அவரை வரவேற்கும் நிகழ்வில் பொலிவுட் சுப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, மெஸ்ஸியின் இந்திய விஜயத்தின் போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள 100 ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதற்காக ஒரு ரசிகரிடமிருந்து இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாவிற்கு அண்மித்த தொகை அறவிடப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.