விடுதலை கோரி திருத்தந்தை காலில் விழுந்த சுரேஷ் சலே குடும்பத்தினர்; மன்னிப்பு கிடைக்குமா!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதநேயப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவரது குடும்ப உறவினர்கள் இன்று (23) திருத்தந்தை லியோ பாப்பரசருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதற்கமைய, இலங்கைக்கான திருத்தந்தையின் தூதுவரான அப்போஸ்தலிக்க நன்சியோவிடம் குறித்த கடிதத்தை கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேஷ் சலே, அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததாகவும், பின்னர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, சலே விவகாரம் தொடர்பாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சில பாதிரியார்கள் அண்மையில் கருத்துகளை வெளியிட்டிருந்த சூழ்நிலையிலேயே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.