பாழடைந்த கட்டடத்தில் சட்டத்தரணி செய்த வேலை; அதிரடியாக கைது செய்த பொலிஸார்
கொழும்பு, வாழைத்தோட்டம் காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த சட்டத்தரணி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாஞ்சியாரச்சி மாவத்தை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் வைத்து சட்டத்தரணி கைது செய்யப்பட்டார். இதன்போது சட்டத்தரணியிடம் இருந்து 'ஐஸ்' ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
ஆரம்பகட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
1996 ஆம் ஆண்டு சட்டத்தரணியாகப் பதவியேற்ற இவர், புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.