இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல் நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் தீர்மானம்
யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் இலங்கையர்கள், பலாலி வானூர்தி நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது சில கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் வெளியேறிய அனைவரும் இப்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையம் ஊடாகவும் அச்சமின்றித் திரும்ப முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், இவ்வாறு நாடு திரும்புவோரை மீள்குடியேற்றம் செய்வதற்கும், அவசியமான காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாகத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.