ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது ; திருகோணமலையில் வீதிக்கு இறங்கும் மக்கள்
வடக்கு கிழக்கில் தமிழ்மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை (02) மாலை 5.00 மணிக்கு திருகோணமலை சிவன்கோவிலடியில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை சமூகசெயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர், இது தொடர்பில் அவர்கள் கூறுகையில்,
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழ்ரகளின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தலங்களை அழித்தல்,
நாடுமுழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின் கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணானவகையில் தடுத்தல்.
ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தல் எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே செல்கின்றது.
ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எனக்கூறிப் பெரும் பிரச்சாரம் செய்துவந்த ஜேவிபி அரசு முன்னைய ஆட்சியாளர்கள் செய்த சட்டவிரோதப் பணிகளையே இன்னும் தொடர்ந்து வருகின்றது.
குறிப்பாக இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் உகந்தையில் புத்தர்சிலை நிறுவுதல் ஒரு இன மத விரோதச் செயலாகும். அத்துடன் நீண்டநாளாக தொடரும் சமய வழிபாட்டுத்தலங்களின் பிரச்சனைகளுக்கும் எந்த தீர்வையும் தராது அடாவடியினைச் செய்து வருகின்றது.
கின்னியா சிவனாலய வழிபாட்டு முடக்கம், திருக்கோணேச்சர ஆலய காண்டாமணி நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு, வெடுக்கு நாறிமலையில் வழிபாட்டுக்குத் தடை, குருந்தூர் மலையில் தடையினை மீறிய புத்தவிகாரை தையிட்டி சட்டவிரோத விகாரைப் பிணக்கைத் தீர்க்காமை என பலநூறு சமயத் தலங்களின் பட்டியல் நீள்கின்றதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .