அறிமுகம் இல்லாத ஆட்களிடம் அவதானம்; யாழ் நகரில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்
யாழ். போதனா வைத்தியசாலை அருகே வாகன பாதுகாப்பு நிலையம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் 34 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்ற இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தொலைபேசி இலக்கம் கேட்ட நபர்
பளையை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் நகர பகுதியில் தனது வேலை நிமித்தம் வந்துள்ளார். பேருந்தில் பயணிப்பதற்காக தனது சைக்கிளை குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து செல்ல முற்பட்டவரிடம் அங்கு வந்த ஒருவர் அவரை தனக்கு தெரியும் என்று கூறி கைபேசி இலக்கத்தை தருமாறு கேட்டுள்ளார்.
எனினும் இருட்டில் நின்ற நபரிடம் தான் கைபேசி பாவிப்பதில்லை அவர் கூறிய நிலையில் உடனே எதிரில் நின்றவர் அவரின் முகத்தில் குத்திவிட்டு பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் வாகன பாதுகாப்பு நிலையத்தில் பணியிலிருந்தவரிடம் சம்பவத்தை கூறியுள்ளார். இந்நிலையில் பணியிலிருந்த நபர், அவ்வாறு செய்தவர் தனது தம்பிதான் என்றும் நாளை வாருங்கள் உங்கள் பணப்பையை மீட்டுத் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், பேருந்தில் செல்வதற்கு செலவாக 500 ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். இரவு நேரமென்பதால் பாதிக்கப்பட்டவரும் வேறு வழியின்றி அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.
தம்பியின் கொள்ளைக்கு அண்ணன் உடந்தை
மறுநாள் காலை குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்துக்கு சென்ற பாதிக்கப்பட்ட நபரிடம் தனது தம்பியிடம் வாங்கினார் என்று கூறி அவரின் பணப்பையை வாகன பாதுகாப்பு பணியிலிருந்தவர் கொடுத்துள்ளார்.
பணப் பையை வாங்கிய பாதிக்கப்பட்ட நபர், அந்த இடத்திலேயே சோதனையிட்டுள்ளார். அதோடு பணப்பையிலிருந்த 8 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததுடன், வங்கி அட்டை மூலம் 26 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில், பணப் பையை வழங்கியவரிடம் பாதிக்கப்பட்டவர் கேட்டபோது, அவருக்கு ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, எனது தம்பியை பிடிக்கமுடியாது. நீ இதைக் கொண்டு போ”, என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்தில் பணியாற்றிய நபர் திட்டமிட்டு இவ்வாறான வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றதாக தெரிவித்த பொலிஸார் அறிமுகம் இல்லாதவர்களிடம் மக்கள் அவதானமாயிருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.