ஓடும் ரயிலில் துடித்த நிறைமாத கர்ப்பிணி ; வீடியோ அழைப்பால் பிரசவம் பார்த்த இளைஞர்
ரயில் நிலையத்தில் பெண்ணொருவர் சிசுவைப் பிரசவித்துள்ளார். குறித்த பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த 15ஆம் திகதி பதிவாகியுள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
திடீரென பிரசவ வலி
அவர் கடந்த 15 ஆம் திகதி பிரசவத்துக்காக தன் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் மும்பை மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், குழந்தை பிறக்க சில நாட்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளார். இதனால், கர்ப்பிணிப் பெண் ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் ஓடும் ரயிலில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அப்பெண் குழந்தையை பிரசவிக்கும் நிலையை அடைந்துள்ளார். இதனை அவதானித்த சக பயணியான விகாஸ் திலிப் என்ற இளைஞர், உடனே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்.
அப்போது ராம் மந்திர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. வலியால் துடித்த பெண்ணிற்கு பிரசவம் பார்க்க அங்கு மருத்துவர்களோ , மருத்துவ வசதியோ, ஆம்புலன்ஸ் வசதியோ இல்லை.
இதனால் இளைஞர் திலிப் உடனே தன் தோழியான மருத்துவர் தேவிகா தேஷ்முக்கை, 'வீடியோ' அழைப்பில் தொடர்பு கொண்டார். பின்னர் தனது தோழியின் வழிகாட்டுதல் படி ரயில் நிலையத்திலேயே சிறிய தடுப்பு ஏற்படுத்தி குறித்த பெண்ணிற்கு திலிப் பிரசவம் பார்த்தார்.
சிறிது நேரத்தின் பின்னர் அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து அந்த பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. குறித்த இளைஞர் தான் பிரசவம் பார்த்ததையிட்டு பெருமையடைவதாகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பதற்றமுமின்றி சரியான நேரத்தில் செயற்பட்டு தாமாகவே முன்வந்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இளைஞர் திலிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.