பஸ்ஸில் ஏற முற்பட்டவர் பேருந்து மோதியதில் உயிரிழப்பு; வவுனியாவில் சம்பவம்
வவுனியா, பூவரசங்குளத்தில் பஸ்ஸில் ஏற முற்பட்டவரை பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை பூவரசங்குளம் சந்தியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் பூவரசங்குளம், மணியர்குளம் பகுதியைச் சேர்ந்த 76 வயதுடயை சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்தவராவார். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பஸ்ஸில் ஏற வந்த முதியவரை மோதிய பேருந்து
வவுனியாவில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் குறித்த பஸ் தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் அந்த பஸ்ஸில் ஏறுவதற்காக வீதியின் மறுபக்கத்திலிருந்து பஸ்ஸின் முன்பக்கமாக வந்த முதியவர் ஒருவர் பஸ்ஸில் ஏற முற்பட்டார்.
அவ்வேளை பஸ்ஸை சாரதி செலுத்தியமையால் மேற்படி முதியவர் மீது பஸ் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பஸ்ஸின் சாரதியையும் கைது செய்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பஸ்ஸை பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்துக்குப் பொலிஸார் எடுத்துச் சென்றனர்.