கிளிநொச்சி நீதிமன்றில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு!
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02-2026) மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சந்தேகநபருக்கு இன்றையதினம் பகல் 12 மணிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் குறித்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பூப்புனித நீராட்டு விழாவில் வாய் தர்க்கம்
கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்போது அதே இடத்தை சேர்ந்த அர்ச்சுனன் ரஜீபன் என்ற 19 வயதுடைய நபர் கத்தியால் வயிற்றில் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்து இரத்த மாதிரிகள் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அந்தவகையில் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நேற்றையதினம் (02-02-2026) குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர் தரப்பு சட்டத்தரணி S.ஸ்ரீகாந்தா முன்னிலையில் தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டதுடன் அவரிடம் "மன்றிற்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?" என கேள்வி கேட்கப்பட்டு அவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.