கெரவலப்பிட்டி விவகாரம்; இன்று கூடவுள்ள அரசின் பங்காளி கட்சிகள்
கெரவலப்பிட்டி மின்நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு அரசாங்கம் வழங்கும் முடிவு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பத்து கட்சிகளின் தலைவர்கள் இன்று கூடுகின்றனர்.
இதில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர, லங்கா சமசமாஜ கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி.வீரசிங்க, ஸ்ரீலங்கா மகாஜனா கட்சியின் தலைவர் அத்துரலிய ரத்ன தேரரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த குழுவினர் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதித்தது. அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை நடத்த குழு முடிவு செய்தனர்.
இந்நிலையில் அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகளின் பிரதிநிதிகளும் தமது கவலைகள் தொடர்பான கடிதத்தை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.