கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய தீர்த்த திருவிழா; கலந்துகொண்ட பெருமளவு பக்தர்கள்
இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களுள் ஒன்றாக திகழும் வரலாற்று பிரசித்தி பெற்ற கீரிமலை நகுலாம்பிகா தேவி சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தீர்த்த உற்சபம் இன்று காலை பெருமளவு பக்தர்கள் புடைசூழ மிகவும் பக்தி சிரத்தையுடன் இடம்பெற்றது.
சிவராத்திரி தினமான நேற்றியதினம் நகுலேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா இடம்பெற்ற நிலையில் இன்று தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்களுள் கீரிமலை நகுலேஸ்வரமும் ஒன்றாகும்.

தல வரலாறு
ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது.

மேரு மலையில் ஒரு பக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த சுதாமா என்னும் பெயருடைய முனிவரால் தனது தவத்திற்கு இடையூறு செய்தமைக்காகச் சாபமிடப்பட்ட யமத்கினி என்ற வேடன் கீரிமுகம் வாய்க்கப் பெற்றான்.
அவ் வேடன் இங்கு நீராடி சாப விமோசனத்தைப் பெற்றான். கீரிமுகம் நீங்கியதால் அவ்வேடன் நகுல முனிவர் எனப்பட்டார். இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்றும் நகுலகிரி என்றும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடமொழிச்சொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயம் நகுலேஸ்வரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.

9ம் நூற்றாண்டில் சோழ இளவரசி மாருதப் புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து பின்னர் சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்டு கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்தத்தின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், கீரிமலைப் புனித்த தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயும் தீர்ந்து குதிரை முகமும் மாறியது என்பது ஐதீகம்.

அதுமட்டுமல்லாது காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது.