பெய்துவரும் பலத்த மழையால் வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்!
கண்டியில் பெய்துவரும் கடும் மழையால் ரயில் நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று (24-12-2022) தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கமானது,
கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து வட கிழக்காக 110km தூரத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்டது.
இது இன்று (25-12-2022) மதியம் தென்மேற்கு திசையாக நகர்ந்து திருகோணமலை பிரதேசத்தின் ஊடாக இலங்கையை ஊடறுத்து சென்று, நாளை காலை கன்னியாகுமரியின் கொமோரின் பிரதேசத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணிக்கு 45 முதல் 55 வரை காணப்படுவதுடன் (காற்றின் வேகமானது 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும்) கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் நாளை மறுதினம் முதல் கடலின் கொந்தளிப்பு படிப்படியாக குறைவடையும்.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று காலை 05.30 க்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கனத்த மழை பெய்யும் எனவும், சில பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன் மீனவர் சமூகம் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் காலி முதல் கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களிலும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியங்களிலும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் பயணங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.