கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பியோடிய கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்!
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்ற 15 கைதிகள் தவிர்ந்த ஏனைய அனைவரும் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், புனர்வாழ்வு நிலையத்தின் செயற்பாடுகள் வழமை போன்று தற்போது முன்னெடுக்கப்படுவதாக மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் கடந்த வெள்ளிக்கிழமை (12) முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது குறைந்தது 25 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பல கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் 5 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பின்னணியில், தப்பியோடிய பல கைதிகள் பின்னர் பொலிஸில் சரணடைந்தனர், மேலும் முகாமில் உள்ள மற்ற கைதிகளால் தாங்கள் பலமுறை துன்புறுத்தப்பட்டதாகக் கூறினர்.
இதேவேளை, கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திற்குள் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருவதாக வெளியாகியுள்ள அறிக்கைகளை கருத்திற்கொண்டு அதன் முகாமைத்துவத்தை மாற்றுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.