கல்முனை வீதியின் இன்றைய அவல நிலை: மக்கள் விசனம்!
கல்முனை - பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதி செப்பனிடுவது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கடும் விசனத்தை தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதி செப்பனிடுவது இடைநடுவில் கைவிட்டதனால் வெள்ள நீர் தேங்கும் இடமாக மாறியதால் சிறுவர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் பெரியோர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதியே அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பமான நிலையில் தற்போது இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (11-08-2023) அப்பகுதி அரசியல்வாதி ஒருவரின் அழுத்தம் காரணமாக குறித்த வீதியின் புனர்நிர்மாண வேலை இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இவ் வீதி தோண்டப்பட்ட நிலையில் மக்கள் பயன்படுத்தும் முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மகஜர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், கடந்த காலங்களில் கூட குறித்த வீதியின் நிர்மாணம் தனி நபர் ஒருவரின் ஆதிக்கத்தினால் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த வீதியை துரித கதியில் நடவடிக்கை எடுத்து புனரமைப்பினை மீள ஆரம்பிக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.