கைலாசாவின் முதலாவது தூதரகம் வோஷிங்டனில்!
கைலாசாவிற்கான தூதரகம் வோஷிங்டன் டிசியில் திறக்கப்பட்டு விட்டதாக புதிய அறிவிப்பு ஒன்றினை பரபரப்புக்கு பஞ்சமில்லாத சுவாமி நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் வழக்கு விசாரணைகளிலிருந்து தப்பிக்க, தலைமறைவான சுவாமி நித்தியானந்தா, கைலாசா என்ற தனித்தீவில் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கி விட்டதாக அறிவித்தார்.
தொடர்ந்து அவர், நாட்டின் கொடி, குடை, ஆலவட்டம், சின்னம் என பலதையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் சில காலமாக சத்தமின்றி இருந்த நித்தியானந்தா தற்பொழுது இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
உலகளவில் நாடொன்றை அங்கீகரிக்க தேவையான அடிப்படை விடயங்கள் நான்கையும் கைலாசா கொண்டுள்ளதாகவும் நிலம், மக்கள் தொகை, அரசியலமைப்பு, நாடுகளிடையேயான இராஜதந்திர உறவு என்பன தேவையாக இருந்த நிலையில், இதுவரை ராஜதந்திர உறவு மட்டுமே மலராமல் இருந்ததாகவும், அமெரிக்காவுடன் உறவு மலர்ந்ததன் மூலம் அந்த குறையும் தீர்ந்து, இப்பொழுது கைலாசா முழுமையான தகைமையுடைய நாடு எனவும் நித்தி தெரிவித்துள்ளார்.
அதோடு , அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவு ஆரம்பித்து விட்டதாகவும் விரைவில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யப் போவதாகவும் நித்தியானந்தா பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.