மகிந்தானந்தவுக்கு எதிரான மோசடி வழக்கு ; ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு
சதோச நிறுவனம் ஊடாக கரம் மற்றும் தாயக்கட்டைகளை இறக்குமதி செய்ததில் 3.9 மில்லியன் ரூபாய் அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு இந்த தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

மோசடி வழக்கு
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும் விளையாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி ஆகியோர் பிரதிவாதிகளாகக் பெயரிடப்பட்டுள்ளனர்.
2014 செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில், 14,000 கரம் பலகைகள் மற்றும் 14,000 தாயக்கட்டைகளை கொள்வனவு செய்ததில் சுமார் 3.9 மில்லியன் ரூபாய் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2014 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் இலாபம் பெறும் நோக்கில், விளையாட்டு கழகங்களுக்கு இவற்றை விநியோகித்ததன் மூலம் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான ஆட்சேபனைகள் தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த போதிலும், தீர்ப்பு இன்னும் தயாராகாத காரணத்தினால் அதனை மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.