இலங்கையர்களுக்கு வெளிநாடு ஒன்றில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! வெளியான அறிவிப்பு
சவூதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாரியளவிலான கட்டுமான திட்டங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், தகுதியான இலங்கையர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஆரம்பித்துள்ளது.
கட்டிடக்கலை நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் அளவீட்டாளர்களுக்கு, தொடர்புடைய திட்டங்களில் பல வேலை வாய்ப்புகள் இருக்கக்கூடும் என்பதால், சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் என்பன, இலங்கை நிபுணர்களுக்கு அந்த வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க சவூதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இதன்படி, கட்டிடக்கலை நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் நில அளவீட்டு துறைகளில் ஆர்வமுள்ள, தகுதியுள்ள இலங்கையர்கள் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னதாக www.slbfe.lk எனும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக இணையத்தளத்தை பார்வையிட்டு தமக்கு தகுதியான துறைக்காக விண்ணப்பிக்க, சுயவிபரத்தை பதிவேற்றுமாறு கோரப்பட்டுள்ளனர்.
தொழில்வாய்ப்புகளுக்கான பதிவுகள் மற்றும் இதர தகவல்களை 1989 என்ற இலங்கைவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 24 மணித்தியாலம் துரித இலக்க சேவையை தொடர்பு கொண்டு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.