கபில சந்திரசேனவின் மரணம்; சி.சி.டி.வி காட்சி.... நீடிக்கும் மர்மம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அவரது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் இயங்கிய போதிலும், அவற்றில் தரவுகள் எதுவும் சேமிக்கப்படவில்லை என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் சம்பவம் நடந்த இடம் மற்றும் கபில சந்திரசேன வசித்த வீடு ஆகியவற்றின் சிசிடிவி காட்சிகள் குறித்த விபரங்களை சமர்ப்பித்த பொலிஸார் இந்தத் தகவலை வெளியிட்டனர்.

2 DVR இயந்திரங்களையும் இரசாயன பகுப்பாய்வு
கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் கிடந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டிலிருந்த சிசிடிவி அமைப்பும், உயிரிழந்தவரின் வீட்டிலிருந்த சிசிடிவி அமைப்பும் இயங்கியுள்ளது.
எனினும் இரண்டிலும் தரவுகள் எதுவும் சேமிக்கப்படவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக, அந்த இரு சிசிடிவி அமைப்புகளினதும் DVR இயந்திரங்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் பொலிஸார் ஒப்படைத்தனர்.
மேலும் கபில சந்திரசேன உயிரிழந்த இடத்திற்குள் நுழைவதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்த போது அந்த வீட்டிற்குள் நுழைய மேலும் இரண்டு வழிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அரவிந்த டி சில்வாவின் வீட்டின் தரைத்தளத்திலிருந்தும், வாகனங்கள் நிறுத்தப்படும் தரைத்தளத்தின் இரண்டு பகுதிகளிலிருந்தும் அந்த வீட்டிற்குள் செல்ல முடியும். எனினும், 5 முதல் 7ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அந்த வழிகளால் யாரும் சென்றதற்கான தகவல்கள் பதிவாகவில்லை.
கைப்பற்றப்பட்ட 2 DVR இயந்திரங்களையும் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்புவதற்கான உத்தரவை வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரினர்.
கபில மரணமடைவதற்கு முன்னர் தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்பு விபரங்களை பெறுவதற்கு ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது. எனினும், அந்த கால அவகாசம் போதாதலால் மேலதிக கால அவகாசத்தை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
சிசிடிவி அமைப்பில் தரவுகள் ஏன் சேமிக்கப்படவில்லை என்பது குறித்து சாட்சியமளிப்பதற்காக, அந்த அமைப்பைப் பொருத்திய பொறியியலாளர் இன்று நீதிமன்றத்திற்கு சமூகமளித்துள்ளார்.