மத்திய கிழக்கு பதற்றம் தாக்கம் ; நேபாளத்தில் எகிறியது வானூர்தி எரிபொருள் விலை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகத் தடைகளைத் தவிர்க்கும் நோக்கில், நேபாளம் வானூர்தி எரிபொருள் விலையை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.
இதன் காரணமாக அந்த நாட்டின் வானூர்திக் கட்டணங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
இதன்படி காத்மாண்டுவிலிருந்து இயங்கும் சர்வதேச வானூர்திகளுக்கான எரிபொருள் விலை 84.7 சதவீதத்தினால் (84.7%) உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொக்காரா (Pokhara) மற்றும் பைரவா (Bhairahawa) ஆகிய இடங்களிலிருந்து இயங்கும் வானூர்திகளுக்கான எரிபொருள் விலை முறையே 116.2% மற்றும் 117.4% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வானூர்திகளுக்கான எரிபொருள் விலை 97.6 சதவீதத்தினால் (97.6%) உயர்த்தப்பட்டுள்ளதாக நேபாளத்தின் அரச எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு (IOC) வழங்க வேண்டிய நிலுவைகளைச் செலுத்துவதற்காக இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் விளைவாக, நேபாளத்தின் உள்நாட்டு வானூர்திக் கட்டணங்கள் 50 சதவீதம் (50%) வரை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகார சபை (CAAN) உறுதிப்படுத்தியுள்ளது.