ஜப்பானில் மீண்டும் வெடித்த எரிமலை : விமான சேவைகள் இரத்து
ஜப்பானில் 13 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதறியதால் அங்கு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன.
எரிமலைகள் அதிகம் காணப்படும் ஜப்பானில் எப்போது எரிமலை விழித்து,நெருப்பு பிழம்புகளை உமிழத் தொடங்கும் என்று தெரியாது.

விமான சேவைகள் இரத்து
இந்நிலையில் 13 மாதங்களாக அமைதியாக இருந்த சகுராஜிமா என்ற எரிமலை இப்போது நெருப்பை உமிழத் தொடங்கி இருக்கிறது.
இந்த எரிமலை ககோஷிமா நகரத்தின் அருகில் உள்ளது அடுத்தடுத்து 2 முறை நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்ததால் வானில் கிட்டத்தட்ட 4.4 கிலோ மீட்டர் தூரம் புகை மண்டலமாகவும், புழுதியாகவும் காட்சி அளித்தது. இது அந்நாட்டின் விமான சேவையை முற்றிலும் பாதித்துள்ளது.
வான்வழி பாதையில் புகை, சாம்பல்கள் நிரம்பிக் காணப்பட்டதால் ககோஷிமா விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்களின் வருகை, புறப்பாடுகளும் தாமதமாகி இருக்கின்றன.
சகுராஜிமா எரிமலை ஜப்பானின் பிரபலமான எரிமலையாகும். 2019ம் ஆண்டு நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்த போது, வானில் 5.5 கிமீ புகை மண்டலமாகவும், தூசுகள் நிரம்பிக் காணப்பட்டது.