இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய நன்கொடை
இலங்கையின் பொதுப்போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஏழு தாழ்தளப் பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த பேருந்துகளை ஏற்றுக்கொள்வதற்கு கடந்த மே மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதனையடுத்து குறித்த பேருந்துகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பொதுப்போக்குவரத்துத் துறைக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஜப்பானின் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றப் பிரதி அமைச்சர் ஆகியோருக்கு இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற கலந்துரையாடலின் பயனாகவே இந்த உதவி கிடைத்துள்ளது.
இந்த தாழ்தளப் பேருந்துகள் மூலம், குறிப்பாக வயோதிபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாகப் பயணிக்க முடியும் . அத்துடன் நாட்டின் பொதுப்போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவதற்கும் இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.