ஒரே வீட்டில் வாழ்ந்தும் 20 ஆண்டுகள் பேசாத தம்பதி ; பிள்ளைகளுக்கு ஷாக் கொடுத்த காரணம்!
ஜப்பானில் 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தும், மனைவியுடன் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்த கணவர் தொடர்பான சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) பகுதியைச் சேர்ந்த ஒடோ கடாயாமா (Otou Katayama) மற்றும் அவரது மனைவி யுமி கடாயாமா (Yumi Katayama) ஆகியோர், தங்களது மூன்று பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

மனைவி,பிள்ளைகள் மீது அன்பு செலுத்தியதால் பொறாமை
குடும்ப வாழ்க்கை வழக்கம்போல தொடர்ந்த போதிலும், கணவர் கடந்த 20 ஆண்டுகளாக மனைவியுடன் நேரடியாகப் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி ஏதேனும் கேள்வி கேட்டால், தலையசைப்பதன் மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ மட்டுமே அவர் பதிலளித்து வந்துள்ளார்.
இருப்பினும், குடும்பத்தில் பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோர் இருவரும் ஒருவருடன் ஒருவர் உரையாடுவதை தாம் ஒருபோதும் பார்த்ததில்லை எனக் கூறிய அவர்களது இளைய மகன், இந்த நிலையை மாற்றுவதற்காக ஜப்பானின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உதவியை நாடியுள்ளார்.
இதையடுத்து, தம்பதியர் முதன்முதலில் சந்தித்த பூங்காவில் மீண்டும் சந்திக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த சந்திப்பில், நீண்டகால மௌனத்திற்கான காரணத்தை விளக்கிய கணவர், மனைவி,பிள்ளைகள் மீது அதிக அன்பும் கவனமும் செலுத்தியதால், தனக்குள் பொறாமை உணர்வு ஏற்பட்டதாகவும், அந்த உணர்வின் காரணமாகவே மனைவியிடம் பேசாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மனைவியிடம் பேசிய அவர், "நாம் பேசி நீண்ட காலமாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக பிள்ளைகளை சிறப்பாக வளர்த்ததற்கு நன்றி. இனி மீண்டும் பேசி மகிழ்ச்சியாக வாழ்வோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அந்த தம்பதியரின் மீள்சந்திப்பு காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரவி, உலகம் முழுவதும் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.