நீதிமன்ற சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பொதியை வீசிய நபருக்கு நேர்ந்த கதி!
கங்கொடவில நீதவான் நீதிமன்ற சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பொதியை வீசிய நபருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கே கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய் லக்மால் விஜேசிங்க இந்த சிறைத்தண்டனையை விதித்துள்ளார்.
சந்தேகநபர் தமக்கு எதிரான வழக்கில் ஆஜராவதற்காக இன்றையதினம் (22-02-2024) நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
இதன்போது, திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்த போது, சந்தேக நபர் ஒரு பொதியை சிறையினுள் வீசியுள்ளார்.
சம்பவத்தை கண்ட நீதவான் உடனடியாக செயற்பட்ட நிலையில், நீதிமன்றத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி அந்த பொதியை எடுத்து பரிசோதித்த போது அதில் ஐஸ் போதைப்பொருள் இருந்தது தெரியவந்துள்ளது.
குறித்த பொதியில் 900 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் 03 மாத சிறைத்தண்டனையும், ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனையுமாக 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.