இராணுவ அதிகாரியை கொலை செய்த இராணுவ கோப்ரலுக்கு நேர்ந்த கதி!
இலங்கையில் இராணுவ கனிஷ்ட உயர் அதிகாரி ஒருவரை கொலை செய்த இராணுவ கோப்ரலுக்கு 10 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்றைய தினம் (03-04-2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ கோப்ரலுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இராணுவ முகாமில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
குறித்த கனிஷ்ட அதிகாரி தம்மை தாக்கியதாகவும் விடுமுறை தராமையால் கோபமடைந்து சண்டையிட்ட போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதிவாதி சாட்சியமளித்துள்ளார்.
திடீர் சண்டை கோபாவேசமாக மாறி இடம்பெற்ற கொலைக்கு பிரதிவாதியை குற்றவாளியாக அறிவித்து 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.