யாழ். நல்லூர் திருவிழாவில் பரபரப்பு ; வசந்தமண்டபத்திற்கு முன்னால் பெண்கள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குள்ளே வசந்தமண்டபத்திற்கு முன்னால் பெண்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா இன்று (17) சிறப்பாக இடம்பெற்றது.
பூசைகள் நிறைவுற்று முருகன் வீதியுலா சென்றடைந்து மீண்டும் வசந்தமண்டபத்திற்குள் நுழைந்தார் அதன்போது வசந்த மண்டபத்திற்கு முன்பாக முருகனைத் தரிசிப்பதற்காக காத்திருந்த பெண்கள், விலகிப் போகவில்லை என்று சிவப்புச் சால்வை கட்டிய நபர் ஒருவர் பெண்களைத் தாக்கியுள்ளார்.
இதனால் வசந்தமண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. தாக்குதலை நடாத்திய நபரை பாதிக்கப்பட்ட பெண்களும் அங்கிருந்த பலரும் கடிந்தார்கள்.
புதிதாக சிவப்பு சால்வை கட்டிக்கொண்டு நல்லூரில் சுற்றித்திரிபவர்கள் சிலர் அராஜகமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஒலிவாங்கியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
எனவே இந்த பிரச்சினையை ஆலய நிர்வாகம் தீர்க்க வேண்டும் எனவும் தீர்க்க தவறும் பட்சத்தில் பக்தர்களுக்கும் அவர்களுக்குமிடையே வீண் முரண்பாடுகள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.