யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு ; மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கம் பெற்ற சாதனையாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட மாணவர்கள் ஐவருக்குத் தங்கப் பதக்கங்கள், சிறப்புப் பரிசில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர் அந்தவகையில் நற்குணம் அபிராமி, அச்சுதன் கபிலன் , சுப்பையா துர்க்கா ,பாத்திமா அகிலா மற்றும் முகமட் பாத்திமா சபீயா ஆகியோர் தங்க பதக்கங்களை பெற்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (19) வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள்
பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கெளரவிக்கப்படவும் உள்ளனர்.



