தமிழர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிவந்த தெருவோர வியாபார நிலையங்கள்!
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, கொக்குவில் பகுதிகளில் கடந்த மாதம் 29ம் திகதி இரவு தெருவோர வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டன.
இந்த பரிசோதனை நடவடிக்கை திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் இன்றி உணவை கையாண்டமை போன்ற அடிப்படையான சுகாதார வசதிகள் கூட இல்லாமல் சில வியாபார நிலையங்கள் இயங்கியமை பரிசோதனையில் இனங்காணப்பட்டது.
அவ்வாறு இனங்காணப்பட்ட மூன்று வியாபார உரிமையாளர்களிற்கு எதிராக யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இனால் வழக்குகள் நேற்றையதினம் (10-06-2024) தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குகளை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் செ. லெனின்குமார் 3 வியாபார உரிமையாளர்களிற்கும் மொத்தமாக 35,000/= தண்டம் அறவிட்டதுடன் கடும் எச்சரிக்கையும் வழங்கினார்.