யாழ். வந்த தமிழக மீனவர்கள் குழு ; விடுதலை செய்யப்பட்ட ஏழு மீன்பிடி விசைப்படகு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஏழு மீன்பிடி விசைப்படகுகளைப் பார்வையிட, தமிழக மீனவர்கள் குழு யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு வருகை தந்தது.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2022-2023 ஆண்டுகளில் மீன்பிடிக்கச் சென்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏழு படகுகள், 2023 நவம்பர் மாதம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டன.
விடுதலை செய்யப்பட்ட இந்த ஏழு மீன்பிடி விசைப்படகுகளை மீட்டு தமிழகத்திற்கு எடுத்து செல்வதற்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட ஏழு படகுகளின் நிலையை ஆய்வு செய்து, அவற்றை மீட்டு தமிழகத்திற்கு எடுத்து வருவதற்காக, 14 பேர் கொண்ட தமிழக மீனவர்கள் குழு இன்று (25) காலை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தது.
மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 124 தமிழக மீன்பிடி படகுகளுக்கு மத்தியில், விடுதலை செய்யப்பட்ட ஏழு படகுகளையும் இந்தக் குழு பார்வையிட்டது.
முதற்கட்ட ஆய்வின்போது, படகுகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தமிழகத்திற்கு எடுத்து வருவதற்குத் தகுதியுடைய படகுகளை மீட்டெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை சென்ற தமிழக மீனவர்கள் குழு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் பார்வையிடப்பட்ட ஏழு படகுகளும் தமிழகத்திற்கு எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளதாகவும், அவற்றைப் பழுது பார்த்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த உத்தேசித்துள்ளதாகவும் மயிலிட்டிக்கு வருகை தந்த தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.