சகோதரியுடன் முரண்பாடு; யாழ் வந்த புலம் பெயர் தமிழர் குண்டர்களை வைத்து தாக்குதல் !
ஜேர்மன் வாழ் புலம் பெயர் தமிழரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், படுகாமடைந்த இளைஞர் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளதுடன் குறித்த நபர், தனது சகோதரியின் குடும்பத்தினருடன் மற்றும் சகோதரியின் கணவனுடன் முரண்பட்டுள்ளார்.
இளைஞனை வம்புக்கு இழுத்து தர்க்கம்
குறித்த நபர் , தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் நேற்று (14) மது அருந்தியுள்ளார்.
அவ்வேளை , ஏற்கனவே முரண்பட்ட சகோதரியின் கணவனின் நண்பர் அவ்வழியே சென்ற போது நிறை போதையில் இருந்த கும்பல் இளைஞனை வம்புக்கு இழுத்து தர்க்கம் புரிந்து , மண்வெட்டி பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தாக்குதலாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புலம்பெயர் தமிழர் மீண்டும் ஜேர்மன் தப்பி செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.