யாழ்.பல்கலை மாணவன் மரணம் தொடர்பில் பிரதமர் அதிரடி உத்தரவு
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று, உயிரிழந்தமை தொடர்பில், முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்பவர், படித்து வந்துள்ளார்.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று, தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு - வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில் இருந்து, மர்மமான முறையில் தூக்கில் தொங்க விடப்பட்டிருந்த நிலையில் சடலமாக குறித்த மாணவன் மீட்கப்பட்டார்.
இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் தற்கொலை எனும் ரீதியில் விசாரணைகளை கிடப்பில் போட்டு இருந்தனர்.
இச்சம்பவத்தில், குறித்த மாணவன் உயிரிழந்தமை தெரியவருவதற்கு முன்பதாக, அதாவது இரண்டரை மணித்தியாலங்களுக்கு முன்பதாக, அவர் மரணமடைந்தமை தொடர்பிலான தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து, குறித்த மாணவன் உயிரிழந்த விடயம் தெரியவருவதற்கு முன்பாக உயிரிழந்தமை தொடர்பில் தகவல் வெளியானமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு, பொலிஸ்மா அதிபருக்கு, பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.