பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் விளக்கமறியலில்
குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன், பொலிஸ் நிலையங்களில் உள்ள வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில், பொலிஸ் அதிகாரியின் மகன் தலைமறைவாகி இருந்தார்.
அது குறித்து, யாழ் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்த நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதிமன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தது.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரியின் மகன் இன்றைய தினம் (17) சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையானதை அடுத்து, அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
அதேவேளை, சந்தேக நபரின் தந்தையான பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.