யாழ்ப்பாணம் பலாலி வீதி மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு
யாழ்ப்பாணம் பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் சம்மதித்துள்ளனர். பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது.
குறித்த பகுதியை கடந்த ஆண்டு நேரக்கட்டுப்பாட்டுடன் இராணுவத்தினர் போக்குவரத்திற்கு அனுமதித்தனர்.

இந்நிலையில் வடமாகாண ஆளூநர் செயலகத்தில் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலின் போது, குறித்த வீதியினை 24 மணி நேர போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கோரிக்கையை முன் வைத்தார்.
அழுத்தமான கோரிக்கைகளை தொடர்ந்து மேலும் ஒரு மணி நேரம் வீதியை திறந்து விட சம்மதித்துள்ளனர் அதன் அடிப்படையில் இதுவரை காலமும் காலை 06 மணி முதல் இரவு 7 மணி வரையில் திறந்து விடப்பட்ட வீதியினை தற்போது ஒரு மணி நேரம் நீடித்து இரவு 8 மணி வரையில் போக்குவரத்து செய்ய இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.