யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் முதலாம் நாள் நினைவு அஞ்சலி யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவு அஞ்சலி நினைவேந்தப்பட்டது. ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த நினைவேந்தலானது தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் ஊழியர் சங்க பிரதிநிதிகளால் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட பல்கலை மாணவர்கள்,
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் இறுதி நாட்களை முன்னிட்டு இவ்வாரம் இன அழிப்பு வாரமாக நினைவேந்தல்கள் வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாரத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி மற்றும் நினைவேந்தலை தமிழர் தாயகம் இதயபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவ ஒன்றிய தலைவர் , யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர், யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்கள், யாழ் பல்கலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



