யாழில் நீதியின் ஓலம் கையெழுத்து போராட்டம்
யாழ் செம்மணியில் , ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் இன்றைய தினம் (23) முன்னெடுக்கப்பட்டது.
தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுதுத்தியே நீதியின் ஓலம்" எனும், கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம்
குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் பிரத்தியோகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படவுள்ள இந்த கையொப்பப் போராட்டத்தின் ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.