பட்டலந்த விவகாரம் போன்று யாழ் நூலகம் தொடர்பிலும் விசாரணை வேண்டும்
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ் நூலகம்
அங்கு மேலும் உரையாற்றிய அவர்
வடக்கு மாகாணம் என்பது கல்வியில் தலைசிறந்து விளங்குகின்றது. இந்நிலையில் ஜனாதிபதியினால் வரவு செலவுத் திட்டத்தில் யாழ் நூலகத்திற்கு 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியமைக்காக நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.
எமது நாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்திற்கு மூலக் காரணமாக யாழ் நூலக எரிப்பு உள்ளது. இப்போது பட்டலந்த வதை முகாம் தொடர்பில் பேசுகின்றனர். இங்கு தமிழ், சிங்கள இளைஞர்களின் இறப்புக்கு காரணமானவர்களே அன்றைய காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த போது எமது யாழ் நூலகத்தையும் தமிழர்களின் உணர்வுகளையும் எரித்து நாசமாக்கினர்.
இதற்கான விசாரணையும் தேவையாகும் இதனால் பட்டலந்த வதை முகாம் போன்று யாழ் நூலகத்தை எரித்தமை தொடர்பில் விசாரணை குழுவை அமைத்து நீதியை தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும என்று இந்த சபையில் வேண்டிக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.