யாழ். தையிட்டி விகாரை காணி மக்களுடையது அல்ல; அருண் சித்தார்த்
யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து இன்று (13) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் , 'அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்' என்ற தொனிப்பொருளில் இப்பேரணி தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பூஜை வழிபாடுகள் மற்றும் மக்களுக்கான மதிய அன்னதானமும் இடம்பெற்றது. பேரணியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாதைகளை தாங்கியவாறு நின்றனர்.
விகாரைக்குரிய பகுதியே மக்கள் கையப்படுத்தியிருந்தனர்
இதன்போது யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் கருத்துரைக்கையில்,
இலங்கையில் அனைவருக்கும் அனைத்து மதங்களையும் மதிக்கின்ற மத வழிபாடுகளை மேற்கொள்ளும் சுதந்திரம் உண்டு. தையிட்டி விகாரை யாழ்ப்பாண மாவட்ட வரைபடத்தில் 1959ஆம் ஆண்டு விகாரைக்குரிய பகுதி என குறிக்கப்பட்டுள்ள நிலமாகும்.
இது பொதுமக்களின் காணிகள் அல்ல. விகாரை அழிவடைந்த காலத்தில் பொதுமக்கள் அக்காணியை கையகப்படுத்தி, தமது குடியிருப்பினை மேற்கொண்டிருந்தனர்.
ஆனாலும், அது விகாரைக்குரிய நிலமாகவே காணப்படுகிறது. பொதுமக்களின் காணியில் விகாரை அமைக்கப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்தினை நாட முடியும். ஒவ்வொரு மதத்தையும் இனத்தையும் கூறி இனவாதம் மற்றும் மதவாதத்தினை எவரும் தூண்ட முயற்சிக்க வேண்டாம் என அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அண்மையில் யாழ் . நல்லூர் பகுதி ஹோட்டல் உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில், அருண் சித்தார்த் , மனைவி, மனைவியின் சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.