யாழ் கீரிமலையில் திடீரென குவிக்கப்பட்டிருந்த பொலிஸார்! என்ன நடந்தது?
யாழ். கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
காணி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தை அடுத்து நில அளவை திணைக்களத்தினர் அவ்விடத்தை விட்டு திரும்பி சென்றுள்ளனர்.
யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் நேற்றையதினம் (15-12-2023) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
குறித்த தகவலறிந்து ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பில் இன்று முதல் தொடர்ச்சியாக அளவீடு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.