சடலத்தை அடையாளம் காண உதவிகோரும் யாழ் . போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் வீதியில் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.
கோப்பாய் சந்திக்கு அருகில் உள்ள கழிவு நீர் வடிகாலில் இருந்து நேற்றைய தினம்(26) வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டு , கோப்பாய் பொலிஸாரினால் யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
திடீரென வடிகாலுக்குள் விழுந்த வயோதிபர்
உயிரிழந்த வயோதிபர் , வீதியோரமாக நடந்து செல்வதும் , திடீரென வடிகாலுக்குள் விழுவதும் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
வயோதிபருக்கு 70 தொடக்கம் 75 வயது மதிக்கலாம் எனவும் , சடலத்தை அடையாளம் காட்டினாலே , உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். எனவே உயிரந்தவரை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.