யாழில் இ.போ.ச பேருந்தால் நடுவழியில் அந்தரித்த பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று (22) காலை பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்து காணப்படுகிறது.
இதன்காரணமாக, பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள், அரச அதிகாரிகள், ஏனைய தொழிற்துறைகளுக்குச் செல்லும் அதிகாரிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மக்கள் வேண்டுகோள்
யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் இ.போ.ச பஸ்கள் அண்மைக்காலமாக பழுதடைந்து வருவதால் உடனடியாக புதிய பஸ்களை தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் உரியவர்கள் செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.