மீண்டும் சேவையை ஆரம்பித்த யாழ். தேவி கடுகதி புகையிரதம்
யாழ். தேவி கடுகதி புகையிரதம் இன்று (11) தனது சேவையை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் வந்தடைத்தது.
இன்று காலை 6.00 மணிக்கு கொழும்பிலிருந்து சேவையை ஆரம்பித்த குறித்த புகையிரதம் பிற்பகல் 2.25 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.

திங்கள், புதன் மற்றும் வெள்ளி
பல்வேறு காரணங்களினால் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதியன்று தனது சேவையை இடைநிறுத்தியிருந்த யாழ். தேவி கடுகதி புகையிரதம் சுமார் 100 நாள்களின் பின்னர் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது.
இது குறித்து யாழ். புகையிரத நிலைய அதிபர் பிரதீபன் தெரிவிக்கையில், புகையிரத பாதை சீரமைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இடை நிறுத்தப்பட்டிருந்த சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்சேவை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாள்களில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை புகையிரதம் நிலையம் வரை பயணிக்கும் அதேவேளை காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான யாழ். தேவி புகையிரத சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த யாழ். தேவி புகையிரதமானது குளிரூட்டப்பட்ட 04 முதலாம் வகுப்பு பெட்டிகளைக் கொண்டுள்ளது. என்றும் புகையிரதத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட புகையிரத நிலையங்களுக்குச் சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது