கோட்டாபாயவிற்கு யாழ். நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011 இல் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் மின்னணு முறையில் சாட்சியமளிக்க அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சட்டத்தரணி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருவதில் என்ன பாதுகாப்பு பிரச்சினை உள்ளது என்பதை சத்தியக் கடதாசி மூலம் தெரியப்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு தாக்கல்
லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 14 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் சாட்சியமளிக்க அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்த அவர், இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளர். பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் மின்னணு முறையில் சாட்சியமளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
இந்நிலையில் உயிர் அச்சுறுத்தல் தொடர்பான ஆதாரங்களை பெப்ரவரி 6, 2026 அன்று நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசியாக முன்வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டார்.
ஏதேனும் உறுதியான ஆதாரங்கள் இருந்தால் கோட்டாபய ராஜபக்சவை மின்னணு முறையில் சாட்சியமளிக்க அனுமதிக்கலாமா அல்லது ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடலாமா என்பது தொடர்பில் அன்றைய தினம் முடிவெடுக்க்பபடும் என தெரியவருகின்றது.