யாழ் இருபாலை சிறுவர் இல்ல அருட்சகோதரி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!
யாழ்ப்பாணம் இருபாலை சிறுவர் இல்லத்தில் சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் அருட்சகோதரி உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த சிறுவர் இல்லத்தில் துன்புறுத்தல்களை தாங்க முடியவில்லை என மூன்று சிறுமிகள் இல்லத்தில் இருந்து தப்பியோடி இருந்தனர்.
அது தொடர்பில் தீவிர விசாரணைகளை சிறுவர் நன்னடத்தை பிரிவினர் கோப்பாய் பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்தனர்.
பொலிஸார் விசாரணை
அதன் போது , சிறுவர் இல்லமானது , அனுமதிகள் பெறப்படாது நடாத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டதையடுத்து அங்கு இருந்த 13 சிறுவர்கள் மீட்கப்பட்டு, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , சிறுவர்களிடம் கடுமையான வேலைகளை வாங்கியமை , உடல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டமை , உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தியமை , கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளாக்கிய விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனை அடுத்து மீட்கப்பட்ட சிறுவர்கள் 13 பேர் மற்றும் ,சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் மீட்கப்பட்ட 03 சிறுவர்களாக 16 சிறுவர்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி வைத்திய அறிக்கை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் , சிறுவர் இல்ல, முகாமையாளர், இல்ல காப்பாளர் மற்றும் சமையலாளர் ஆகிய மூவரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.