தனது நீண்ட நாள் காதலரை பிரிந்த இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி
இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தனது நீண்ட நாள் காதலரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனியும், தொலைக்காட்சி ஊடகவியலாளரான அண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஜோர்ஜியா மெலோனி தன் நீண்ட கால காதலர் அண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் பதிவில்,
"கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நீடித்த அண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவுடனான எனது உறவு முடிவுக்கு வருகிறது. எங்கள் பாதைகள் சில காலமாக வேறுபட்டுவிட்டன. அதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜியாம்ப்ரூனோவின் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் அவர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதையும் ஒரு பெண் சக ஊழியரிடம் தேவையற்ற கேள்வியை கேட்டு அத்துமீறுவதையும் காண முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நிகழ்ச்சியில் சக பெண் ஊழியர்களிடம் பாலியல் தொடர்பான கருத்துகளை பகிரங்கமாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஜியாம்ப்ரூனோவை பலரும் கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.