யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இப்படியும் நடக்கின்றதா; மக்களே அவதானம்!
யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பழக்கடை ஒன்றில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப்படுத்தி கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 31திகதி அங்குள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை மிரட்டி 7 ஆயிரத்து 500 ரூபாய்கும் அதிகமான பணத்தை சந்தேக நபர்கள் கப்பமாகப் பெற்ற நிலையில் , சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து அதுதொடர்பில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரனைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அருகில் உள்ள கடை ஒன்றின் சிசிரிவி கமராவின் பதிவைப் பெற்ற புலனாய்வுப் பிரிவினர் இருவரை இனங்கண்டு பழக்கடை வியாபாரிகளிடம் ஒளிப்படங்களை கொடுத்து அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கோரியிருந்தனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரில் ஒருவர் நேற்று பிற்பகல் பேருந்து நிலையத்துக்குள் வந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவலை வழங்கியிருந்தார்கள்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த பொழுது சந்தேக நபர் தப்பிக்க முயன்றுள்ளார். எனினும் அங்கிருந்த இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து சந்தேக நபரைப் பொறுப்பேற்று மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குற்றதடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நபர் கீரிமலை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்த நிலையில், மற்றைய சந்தேக நபரைக் கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.