தலைவிரித்தாடும் கொரோனா; சித்த மருத்துவர் வீரபாபுவை களம் இறக்குகிறாரா ஸ்டாலின்?
தமிழகத்தில் தொற்றின் 2வது மிக மோசமாகி உள்ளதுடன் ஒருநாளைக்கு 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, சித்த மருத்துவத்தையும் கையில் எடுத்துள்ளது.
அந்த வகையில் சித்த மருத்துவர் வீரபாபுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அரசு தொடங்க முன்னெடுப்பாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வீரபாபு இனி தொடர்ந்து தொற்று பாதித்த மக்களுக்கு சிகிச்சை தர ஆரம்பித்தால், நிச்சயம் இது தமிழக மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்.
கொரோனா பாதிப்பு திமுக அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி உள்ள நிலையில், கொரோனாவுக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்காத நிலையில், அலோபதியில் மருந்துக்காக ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டி வரும் நிலையில், வீரபாபுவை அழைத்து தமிழக அரசு சந்தித்து பேசி வருவது புது நம்பிக்கையையும், தெம்பையும் மக்களுக்கு தந்து வருகிறது.
யார் இந்த வீரபாபு?
தமிழகத்தில் முதல் சித்த மருத்துவ கோவிட்-19 பராமரிப்பு மையத்தை நடத்தியவர்தான் வீரபாபு.. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அரசு ஒதுக்கிய ஜவஹர் கல்லூரி சித்த மருத்துவ மையத்தில் பணியாற்றியவர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளைக் குணப்படுத்தியவர். பாரம்பரிய மருத்துவம், மூலிகை உணவுகள் மூலம் விரைவாக நோயாளிகளை குணமாக்கியதால் தமிழகம் முழுவதும் இவர் அறியப்பட்டார். 'உழைப்பாளி' என்னும் மருத்துவமனையை தொடங்கி, அங்கே 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டவர்.
சித்த மருத்துவத்துறை அங்கீகரித்துள்ள, கபசுரக் குடிநீரோடு, ஆடாதொடை கசாயம், கற்பூரவள்ளி ரசம், சிறப்பு மூலிகை தேனீர் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு நோயாளியின் உடலுக்கு ஏற்ப தந்து, சூரிய ஒளி சிகிச்சையும் சேர்த்து அளிப்பவர். இவரிடம் 7 நாட்கள் சிகிச்சை பெற்ற 6 பேருக்கு, கொரோனா நெகட்டிவ் என்று வந்தது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாரம்பரியமான மூலிகை மருத்துவத்தால், 7 நாட்களில் கொரோனாவிலிருந்து மக்கள் விடுபட்டு வந்ததால், பெரிதும் பேசப்பட்டவர்தான் இந்த வீரபாபு.
இந்நிலையில் வீரபாபுவை அழைத்து தமிழக அரசு சந்தித்து பேசி வருவது புது நம்பிக்கையையும், தெம்பையும் தமிழக மக்களுக்கு அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.