இம்ரான்கான் உயிருடன் இல்லையா? பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயிருடன் இல்லை என மூன்று மூத்த இராணுவ அதிகாரிகள் தமக்குத் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, தற்போது அடியாலா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சந்திக்க குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், “இம்ரான்கான் நம்முடன் இல்லை; அவர் சிறையில் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை” என மூன்று மூத்த இராணுவ அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக வஜாஹத் சயீத் கான் தெரிவித்துள்ளார். எனினும், இது தற்போது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளது.
அதேசமயம், பாகிஸ்தான் இராணுவம் இம்ரான்கான் உயிரிழந்ததாக வெளியான தகவல்களை மறுத்து, அவை ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ளது.
இம்ரான்கானை விடுதலை செய்யக் கோரி அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த புதிய தகவல் அங்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.