இலங்கைக்கு அருகில் ஈரானியக் கப்பல்கள் ; அரசாங்கம் தீவிர அவதானம்!
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்கள் குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கையின் எல்லைக்குட்பட்ட கடற்பரப்புக்கு (Territorial Waters) வெளியே நிறுத்தப்பட்டுள்ளதால், அவை தொடர்பில் இலங்கைக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லை என்றும், அந்தக் கப்பல்களுக்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக, தங்களின் சொந்த நாட்டுத் துறைமுகங்களுக்குத் திரும்ப முடியாமல் சுமார் 20 ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயதுக்கு அப்பால் (14 கடல்மைல் தொலைவில்)அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் 'டேங்கர்ட்ரேக்கர்ஸ்' (TankerTrackers) இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஈரானியக் கொடியுடன் கூடிய சுமார் 13 எண்ணெய் தாங்கி கப்பல்கள் மற்றும் தடைகளிலிருந்து தப்பித்துச் செயல்படும் "நிழல் கடற்படை" என அழைக்கப்படும் பல கப்பல்கள் உட்பட சுமார் 20 ஈரானியக் கப்பல்கள் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன.
இருப்பினும், இந்த எண்ணெய் தாங்கி கப்பல்களில் தற்போது எரிபொருட்கள் எதுவும் ஏற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கைக் கடலோரப் பகுதியிலிருந்து 19 கடல் மைல் தொலைவில் ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS டெனா' என்ற போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதுடன், 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.