இலங்கை வந்த ஈரான் கப்பல் ; அரசாங்க தரப்பில் வெளியான தகவல்
சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கப்பல் விவகாரம் மற்றும் இராஜதந்திர அழைப்புகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அதில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு மத்தியஸ்த நாடாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய சூழலில் அந்த நடுநிலைமையைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
"இதனைத்தான் நாம் இதுவரை காலமும் செய்து வந்தோம், தொடர்ந்தும் பின்பற்றுவோம்" என அவர் உறுதியளித்தார்.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படை விழாவின் போது, இலங்கை கடற்படைத் தளபதி ஏனைய நாட்டுத் தளபதிகளுக்கு விடுத்த அழைப்பு குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இவ்வாறான சர்வதேச விழாக்களின் போது, ஏனைய நாட்டுத் பிரதிநிதிகளைத் தத்தமது நாடுகளுக்கு வருமாறு வாய்மொழியாக அழைப்பது ஒரு சாதாரண மற்றும் வழமையான இராஜதந்திர நடைமுறையாகும்.
இத்தகைய சுமுகமான அழைப்புகள் இராஜதந்திர மட்டத்தில் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது சர்வதேச அளவில் அனைவரும் அறிந்த விடயமாகும். இந்த விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் எவ்வித உத்தியோகபூர்வ அழைப்புகளும் அரசாங்கத்தினால் விடுக்கப்படவில்லை என்பதை அவர் தெரிவித்தார்.