அமெரிக்காவுக்கு வலிமிகுந்த தாக்குதல் வழங்கப்படும் ; ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என ஈரான் இன்று (30) அறிவித்துள்ளது.
இது ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கான சர்வதேசக் கூட்டணியை உருவாக்குவதற்கான அமெரிக்கத் திட்டங்களைச் சிக்கலாக்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுடன் தொடங்கிய போர் இரண்டு மாதங்களைக் கடந்தும், முக்கிய கடல் பாதையான நீரிணை மூடப்பட்டே உள்ளது.
இது உலகின் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைத் தடுத்துள்ளது.
இதனால் உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதுடன் பொருளாதார வீழ்ச்சிக்கான அபாயங்கள் குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளன.
மோதலைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளன, ஏப்ரல் 8 முதல் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது.
ஆனால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை, அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக ஈரான் இன்னும் நீரிணையை தடுத்து வருகிறது.
அணுசக்தி விவகாரங்களில் பேச்சுவார்த்தைகளில் ஈரானை மிகவும் நெகிழ்வானதாக மாற்றும் நம்பிக்கையில், ஈரான் மீது புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசிப்பதாக கூறப்பட்டது.
இது எண்ணெய் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.